இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 – ஒரு முடிந்த காவியம் !

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8க்கான பாதுகாப்பு உதவியை, வரும் நவம்பர் 15 முதல் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.
இதனால், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இதனைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 மற்றும் 10 இயங்காது.
எனவே இவர்கள் பாதுகாப்பில்லாமல், பதிப்பு 8 ஐப் பயன்படுத்த வேண்டும். அல்லது புதிய ஹார்ட்வேர் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும்.
அக்டோபர் 26ல், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு வெளியாக இருக்கிறது. நவம்பர் 15ல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8க்கான உதவி நிறுத்தப்படுகிறது.
இந்த நாளுக்குப் பின்னர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம், கூகுள் அப்ளிகேஷன் சர்வீஸ் தளத்திலிருந்து ஏதேனும் பெற விரும்பினால், பிரவுசரை மேம்படுத்த நமக்கு செய்தியும் அறிவுரையும் வழங்கப்படும். ஏனென்றால், கூகுள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6 (ஜனவரி 2010) மற்றும் 7னை (ஜூலை 2011) ஒதுக்கி வைத்துவிட்டது.
கூகுள் எப்போதும் அப்போதைய நடப்பில் உள்ள பிரவுசரையும், அதற்கு முந்தைய அந்த பிரவுசரின் பதிப்பினையும் மட்டுமே அனுமதிக்கும். இது அந்நிறுவனத்தின் கொள்கை முடிவாகும். இது நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தமாகும்.
ஐ.இ. 7 க்கான சப்போர்ட் நிறுத்தப் படுகையில் அது உலகில் 7% பேரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், ஐ.இ. பதிப்பு 8, உலக அளவில் பரவலாக 25% பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரு பதிப்புகளையும் பயன்படுத்தியவர்களில், ஐ.இ. 8, 47% பேரால் பயன்படுத்தப்படுகிறது.
எனவே விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் ஐ.இ. 8 பயன்படுத்துபவர்கள் பாடு இனி கஷ்டம் தான்.
ஐ.இ. 8 மூலம் கூகுள் மெயில், கூகுள் டாக் மற்றும் கூகுள் காலண்டர் வசதிகளும் கிடைக்காமல் போகலாம். ஒரு கட்டத்தில் உள்ளே சென்று பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம்.
இதனால், விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள், பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசருக்கு மாறலாம். இந்த பிரவுசர்கள் எக்ஸ்பியில் இயங்குவதற்கு எந்த தடையும் இல்லை.

Post a Comment

0 Comments